சென்னை: கேலோ இந்தியா நமது விளையாட்டு உள்கட்டமைப்பின் தரத்தை உயர்த்தி உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்நாட்டில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். நமது இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நம் தேசத்தின் சொத்துக்கள். அவர்களின் முன்னெப்போதுமில்லாத செயல்பாடு இந்தியாவை உலகளாவிய விளையாட்டு வல்லரசாக மாற்ற வழிநடத்துகிறது.
கேலோ இந்தியா என்ற நமது அன்பான #பிரதமர்மோடி அவர்களின் சிந்தனை, அடிமட்டத்தில் இருந்து திருப்பம் தரும் புதிய மாற்றங்களை கொண்டு வந்து, வளரும் திறமையாளர்களுக்கு தேவையான ஆதரவை உறுதிசெய்கிறது. அதீத நம்பிக்கையூட்டி விளையாட்டுத்திறனுடன் போட்டியிட்டு வெற்றிபெற அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. கேலோ இந்தியா நமது விளையாட்டு உள்கட்டமைப்பின் தரத்தையும் உயர்த்தியுள்ளது.
‘வீர மங்கையை’ இலட்சினையாகவும் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை கூடுதலாகவும் சேர்த்திருப்பது இப்போட்டியை மேலும் சிறப்பாக்குகிறது. இதை வெற்றிகரமாகவும் மறக்கமுடியாத போட்டியாகவும் மாற்ற உழைத்து வரும் பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.