சென்னை: மனித வளத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும் சுயதொழிலில் கூடுதல் வளர்ச்சி தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் 2024க்கான தொழில் முனைவோர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மாநாடு 3 நாள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: தற்போதைய நிலையில் நம் நாடு முதல் 15 முன்னேறிய பொருளாதார நாடுகள் பட்டியலில் உள்ளது.
இந்தியாவை போல் டிஜிட்டல் பரிவர்த்தனை உலகளவில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. சாலையில் தள்ளுவண்டி வைத்துள்ளவரும் ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்கிறார். அது தான் உண்மையான வளர்ச்சி. தமிழ்நாடு மற்றும் கேரளா மனித வளங்களில் ஒரு முதன்மை இடத்தை கொண்டுள்ளது, ஆனால் சுயதொழில் வளர்ச்சியில் இந்த இரண்டு மாநிலங்களிலும் மேலும் வளர்ச்சி தேவைப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது பெரு மதிப்பு இல்லை. ஆனால் இன்றைய தினம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் இந்தியாவுடன் கலந்து ஆலோசித்து தான் உலக நாடுகள் முடிவு எடுக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி தான் உலகத்தின் வளர்ச்சி. இந்தியாவின் வளர்ச்சியை கண்டு சில நாடுகள் பொறாமைப்படுகின்றன. ஆனால் நாம் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நமக்கான பாதையில் பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.