ஊட்டி: ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதியில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, நேற்று மாலை தனது தாத்தா வீட்டிற்கு செல்ல நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியை தேடி பெற்றோர் சென்றபோது மறைவான இடத்தில் பலத்த காயங்களுடன் சிறுமி கிடந்துள்ளார். இதை அடுத்து சிறுமியை மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஊட்டி புதுமந்து போலீசருக்கு புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இன்று காலை வரை சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்யவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா பகுதியில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுமந்து போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ஏற்கனவே அப்பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.