மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அதில் இருந்த 148 பயணிகள் உள்பட 160 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று மதியத்துக்கு மேல் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் 148 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உள்பட 160 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் சென்னை விமானநிலைய ஓடுபாதையில் ஓடியபோது, விமானத்துக்குள் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
மேலும், இதே நிலையில் விமானத்தை செலுத்தினால், நடுவானில் ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படலாம் என்பதை விமானி உணர்ந்து கொண்டார். இதனால் ஓடுபாதையிலேயே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை நிறுத்திவிட்டார். பின்னர், சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ‘அந்த விமானத்தை இயக்க வேண்டாம்’ என விமானிக்கு சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் இழுவை வாகனம் மூலமாக இழுத்து வரப்பட்டு, அது புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானியின் சமயோசித நடவடிக்கையால், மலேசியாவுக்கு பயணம் செய்த 148 பயணிகள் உள்பட 160 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் இன்று மதியத்துக்குமேல் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய 148 பயணிகளும் சொகுசு பேருந்துகள் மூலமாக சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.