அரூர், ஜன.18: வீட்டு வாடகை பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், ஆசிரியை உள்பட 3 பேரை கொடுவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செரீன்தாஜ்(48), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் பேகம்(57) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில், அரூர் அருகே மேல்பாட்சாபேட்டையை சேர்ந்த பாதுஷா(33), பெரியார் நகரைச் சேர்ந்த ஷகிலாபானு(37) ஆகியோர், வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் வாடகையை சரிவர தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, பேகத்திற்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, நேற்று பகல் 12 மணியளவில் பாதுஷா, ஷகிலாபானு ஆகிய இருவரும், பேகத்தை தகாத வார்த்தைளால் திட்டியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பாதுஷா, பேகத்தை கொடுவாளால் வெட்டியுள்ளார். இதை கண்டு தடுக்கச் சென்ற செரீன்தாஜ், பக்கத்து வீட்ைடச் சேர்ந்த ஷகிலா ஆகிய இருவரையும், ஷகிலாபானு கொடுவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த செரீன்தாஜ் உள்ளிட்ட 3 பேரும், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஜெரீன்தாஜ் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுஷா மற்றும் ஷகிலா பானுவை கைது செய்தனர்.