புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்கும் வகையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் ஐடியை காங்கிரஸ் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மக்களவை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பின் ப.சிதம்பரம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளை பெற்று வருகிறது. இந்த தேர்தல் அறிக்கை, மக்கள் அறிக்கையாக இருக்கும். பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதே தற்போதைய நடவடிக்கை. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஆலோசனை நடத்தப்படும். சில மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொது கலந்தாய்வுகள் நடத்தப்படலாம். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் எவரும் வரவேற்கப்படுகிறார்கள். மக்கள் தங்கள் ஆலோசனைகளை awaazbharatki.in என்ற இணையதளத்தில் அல்லது awaazbharatki@inc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.இவ்வாறு தெரிவித்தார்.