திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த மறுநாளும் பார்வேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். இந்த உற்சவம் மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். அதன்படி நேற்று இந்த உற்சவம் நடந்தது.
அப்போது மலையப்ப சுவாமி சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் ஆகிய பஞ்ச ஆயுதங்களுடனும், கிருஷ்ணர் சுவாமி மற்றொறு பல்லக்கிலும் ஊர்வலமாக சென்று பார்வேட்டை மண்டபத்திற்குள் எழுந்தருளினர்.
பின்னர் மலையப்ப சுவாமிக்கும், கிருஷ்ணர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னமாச்சார்யாவின் சங்கீர்த்தனைகள் நடைபெற்றது. இதனையடுத்து 3 முறை கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் ஈட்டியை ஏந்தி சுவாமியுடன் வனத்தை நோக்கி ஓடி சென்று ஈட்டியை எறிந்து, வேட்டையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.