காசா: தரைவழித் தாக்குதலின்போது கடந்த 3 மாதத்தில் காசா பகுதியில் 9,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் தற்காப்புப் படைகள் ஒழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்தாண்டு அக். 7ம் தேதி தெற்கு இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர், அங்கு கூடியிருந்த பொதுமக்களைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று, 240 ேபரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல், காசா பகுதியில் இருந்த ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக மும்முனை தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக். 7ம் தேதி முதல் ஜன. 9ம் தேதி வரை ஹமாஸின் ஐந்து படைப்பிரிவு நிலை தளபதிகளில் இருவர் கொல்லப்பட்டனர். கூடுதலாக, 19 படைப்பிரிவு தளபதிகள், 50 நிறுவன தளபதிகள் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களில், இஸ்ரேல் ராணுவம் கடலோரப் பகுதியில் சுமார் 30,000 தீவிரவாத இலக்குகளைத் தாக்கியது.
அக். 7 முதல் இதுவரை 522 வீரர்கள் கொல்லப்பட்டனர். அக். 27ம் தேதி காசாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 188 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தனது திடீர் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து 779 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 76 வெளிநாட்டவர்கள் உள்பட 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். காசா பகுதியில் 9,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் தற்காப்புப் படைகள் ஒழித்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் படைகளின் விபரங்கள் வெளியான நிலையில், தொடர்ந்து ஹமாஸ் தரப்பில் வௌியிட்ட அறிவிப்பில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.