டெல்லி: பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்க 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் சேவையை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவால் விமான சேவை ரத்து செய்வதுடன் சாலைகளிலும் விபத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமானம் புறப்படும் நேரம் தாமதமானால் அது குறித்து உடனுக்குடன் வாட்ஸ் அப், விமான நிறுவனத்தின் இணையதளம், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த புதிய நடைமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.