கிருஷ்ணகிரி, ஜன.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 93 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடும் விதமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தை கடந்த 10ம் தேதி, சென்னையில் அவர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் பிரகாஷ், மதியழகன், மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கீழ் 5,22,119 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் 40,436 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 339 இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 5,62,894 குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு நேர ரேஷன் கடைகள், பகுதி நேர கடைகள், மகளிர் ரேஷன் கடைகள், நகரும் ரேஷன் கடைகள் என மொத்தம் 1,276 கடைகளின் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கும் பணி துவங்கியது. இதையடுத்து, அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், நகர்மன்ற தலைவர், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.
தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் இந்த பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சென்று, பொங்கல் பரிசு தொகுப்பினை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பை இன்று (14ம் தேதி) மாலைக்குள் வழங்கி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாலை வரை 93 சதவீதம் பேருக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வர் உத்தரவின்படி, கடந்த 10ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 93 சதவீதம் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) 100 சதவீதம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்து விடும். மேலும், அடுத்த வார இறுதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்,’ என்றனர்.