சண்டிகர்: மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 6ம் தேதி, குருகிராமைச் சேர்ந்த ரவுடி கும்பல் தலைவன் சந்தீப் கடோலி, போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையில் இருந்த மற்றொரு ரவுடி கும்பல் தலைவன் வீரேந்திர குமார் என்கிற பிந்தர் குஜ்ஜார் திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த போலி என்கவுண்டரில், போலீசுக்கு உதவிய கடோலியின் காதலியும், பஞ்சாப் மாடல் அழகியுமான திவ்யா பகுஜா, அவரது தாய் மற்றும் 5 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகள் சிறையில் இருந்த திவ்யாவுக்கு கடந்த ஆண்டு ஜூனில் ஜாமீன் கிடைத்தது. கடந்த 2ம் தேதி குருகிராமில் உள்ள ஓட்டலில் வைத்து திவ்யா பகுஜா சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது ஆபாச படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால் பகுஜாவை கொன்றதாக கைதான ஓட்டல் உரிமையாளர் அபிஜித் சிங் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான பால்ராஜ் கில்லை போலீசார் கடந்த 11ம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, அரியானாவின் பதேகாபாத் மாவட்டத்தில் உள்ள கால்வாயிலிருந்து பகுஜா சடலம் மீட்கப்பட்டது. அதை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.