‘‘கட்சி தாவல் நிர்வாகிகளை திருப்திப்படுத்த மலைக்கோட்டைக்கு திடீரென விசிட் அடித்தாராமே தேனிக்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர்- தேனிக்காரர் பிரிவுக்கு பின்னர் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட துவங்கினர். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சேலம்காரர் கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. டெல்டாவில் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் சேலம்காரர் அணிக்கு தாவ தொடங்கினர்.
தகவல் தெரிந்த தேனிக்காரர், நாடாளுமன்ற தேர்தலுக்குள் டெல்டாவில் இருக்க கூடிய மீதி உள்ள நிர்வாகிகளும் விலகி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை சந்திக்க முடிவு செய்திருந்தார். இதற்காக சில தினங்களுக்கு முன் மலைக்கோட்டை மாநகருக்கு தேனிக்காரர் திடீர் விசிட் அடித்தார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு தெம்பு தரும் வகையில் சில பூஸ்டர் வார்த்தைகளை பயன்படுத்தி பேசினாராம்… டெல்டா பக்கம் செல்லாமல் திடீரென மலைக்கோட்டை பக்கம் தேனிக்காரரர் விசிட் அடித்ததற்கு பல காரணங்கள் இருக்குதாம்…
சேலம்காரர் கட்டுப்பாட்டில் கட்சி சென்றாலும் தற்போது வரை தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் செல்வாக்கு இருப்பதாக நினைக்கும் தேனிக்காரர், டெல்டா மாவட்டத்திலும் செல்வாக்கு இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் மாற்று கட்சிக்கு தாவக்கூடாது என்பதற்காக தான் நிர்வாகிகளை திருப்திப்படுத்த அங்கே முதலாவதாக தேனிக்காரர் திடீர் விஜயம் செய்தது பின்னர் தான் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.
அடுத்ததாக தேனிக்காரர், டெல்டா மாவட்டத்துக்கும் சென்று நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாரிசுகளை களமிறக்க முயன்ற மாஜிகள் கதையை சொல்லுங்களேன்’’ என ஆர்வமாக கண்களை விரித்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு எம்பி தொகுதியில் இலைக்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு, தங்களது வாரிசுகளை களமிறக்க மாஜி ஷாக் மந்திரியும், உளறல் பேச்சு புகழ் மாஜி மந்திரியும் தீவிர முனைப்பில் இருந்து வருகின்றனர். இதற்காக இலைக்கட்சி கூட்டங்களில் தங்களது வாரிசுகளை முன்னிறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் மாஜி ஷாக் மந்திரியின் கண்ணான மைத்துனருக்கு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துகளை வாரி குவித்தனர். இதில் இலைக்கட்சியின் கிளைக்கழக நிர்வாகிகள் பலரும், ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் கண்ணானவருக்கு வாழ்த்துகள்’ என டிஜிட்டல் பேனரை ரெடி செய்து பூட்டு நகரெங்கும் வைத்திருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருந்தனர்.
இதனைக் கண்ட மாஜி ஷாக் மந்திரியின் மகனானவர், பலத்த ஆத்திரத்திற்கு ஆளாகி இருக்கிறாராம். ‘மகன் நான் இருக்கும்போது கண்ணானவரை எப்படி அரசியல் வாரிசாக முன்னிலைப்படுத்தலாம்? அப்புறம் எதுக்கு என்னை ஒவ்வொரு மீட்டிங்காக அலைய விடுகிறீர்கள்’ என கேட்டுள்ளார். இதுதொடர்பாக குடும்பத்திற்குள்ளேயே குத்துச்சண்டை நடக்கிறது. மறுபுறம், தனது வாரிசை களத்தில் இறக்க திட்டம் தீட்டி வந்த உளறல் மாஜி மந்திரி தரப்பும் ஷாக் ஆகி உள்ளதாம். இதுதொடர்பாக தலைமையிடம் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தண்டனைக்காக மாற்றப்பட்ட பெண் அதிகாரி தேர்தலுக்காக மீண்டு வந்திருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல் ஆய்வாளர்கள் மட்டத்தில் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் நெல்லை, தூத்துக்குடியில் உள்ளவர்கள் குமரி மாவட்டத்திற்கும், குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் நெல்லை, தூத்துக்குடிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்ட காவல்நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பெண் அதிகாரி பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக தூத்துக்குடிக்கு ஏற்கனவே இடமாறுதல் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது தேர்தல் இடமாறுதலில் அதே பெண் அதிகாரி மீண்டும் குமரி மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்றுவிட்டாராம். இவரது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் இவரது வருகையை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தண்டனை பணியிடமாக வெளிமாவட்டத்திற்கு மாற்றப்பட்டவருக்கு மீண்டும் அதே மாவட்டத்தில் எப்படி பதவி வழங்கலாம்? என்பது அவர்களது கேள்வியாக உள்ளது’’ என்று விளக்கினார் விக்கியானந்தா. ‘‘கரன்சி கொடுத்து கட்சி பதவி வாங்குனதா இலை கட்சியில ஆடியோ ைவரலாகிட்டு வருதாமே’’ – புது விஷயத்தை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல வந்தா வாசி நகரத்துல, தெள் என்று தொடங்கி ஆறு என்று முடியுற வெஸ்ட் ஒன்றியம் இருக்குது. இங்க இலை கட்சியோட செக்ரட்ரியா பெயரில் கோல்டு வெச்சிருக்குறவரு பதவியில இருந்தாரு. இவர 2 மாசத்துக்கு முன்னாடி திடீர்னு எடுத்துட்டு, பெயர்லயே கரன்சியை வெச்சிகிட்டிருக்குற ஒருத்தரை இலை கட்சி தலைமை அறிவிச்சதாம். இந்த நிலையிலத்தான் ஆடியோ ஒண்ணு வைரலாகிட்டு வருது.
அந்த ஆடியோவுல கிளை செக்ரட்ரியோட வீட்டுக்காரம்மா பேசும்போது கட்சி கதையெல்லாம் பேசிட்டு கடைசியில, சார் எனக்கு ஒரு டவுட்டு போஸ்டிங் வாங்க காசு கட்டணுமான்னு கேட்க, அப்படி இல்லைப்பா, இருந்தாலும் எதிர்பார்க்குறாங்களே, யாருக்கு பதவி சும்மா போடுறாங்க எல்லாம் துட்டு வாங்கிட்டுத்தான் போடுறாங்கன்னு சொல்லி, ஒன்றிய செக்ரட்ரி பாத்துகலாம், பாத்துகலாம்னு பேசுறாரு.
அப்புறம் திரும்பவும் கட்சி கதைய ேபசி முடிக்குறாங்க. இந்த ஆடியோ நார்த் டிஸ்ட்ரிக் முழுவதுமா வைரல் ஆகிட்டு இருக்குது. இந்த ஆடியோ வந்ததால ஆளாளுக்கு நானும் தான் கரன்சி கொடுத்து பதவிக்கு வந்தேன்னு கட்சிக்குள்ள பரபரப்பா பேசிக்குறாங்களாம். கடைசில கரன்சி இருந்தா தான் பதவியா என இலை கட்சியினர் அப்பாவியா கேட்கிறாங்களாம். இந்த மேட்டர் தான் இப்ப வைரல் ஆகிட்டு இருக்குதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.