சென்னை: ஜனவரி 15ம் தேதி பொங்கல் விடுமுறை நாளில் கணினி முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வரும் பொங்கல் தினம் கொண்டாடப்படும் ஜனவரி 15ம் தேதியன்று, ஞாயிறு விடுமுறை தினத்தில் செயல்படுவது போல காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 15ல் ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும். சென்னை – அரக்கோணம், சூலூர்பேட்டை, கடற்கரை – வேளச்சேரி தடத்தில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.