திருச்சி: திருச்சி கே.கே.நகர் ஈ.வே.ரா சாலையை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான 80 ஏக்கர் உட்பட 120 ஏக்கர் நிலத்தை வாங்க திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் மின்த்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் விலை பேசி உள்ளார். இதற்காக ரூ.4.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு, முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்குவதாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் தவணையாக ரூ.18 லட்சம் ரொக்கமாகவும், 5 லட்சத்துக்கு செக்கும் வழங்கி உள்ளனர்.
செக்கை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லை என செக் திரும்பியுள்ளது. அதோடு லோகநாதனுக்கு சொந்தமான நிலத்துக்குரிய மீதத்தொகையை வழங்காமல் அவரிடம் நிலத்தை எழுதி கொடுக்கும்படி நத்தம் விஸ்வநாதன் தரப்பினர் கேட்டுள்ளனர். இதையடுத்து நந்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் நிலத்தை கேட்டு லோகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லோகநாதன் திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நிலுவை வழக்குகள் மீதான நடவடிக்கையாக கோர்ட் மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டான மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1க்கு மாற்றி 2ம் எண் மாஜிஸ்திரேட் பாலாஜி நேற்று உத்தரவிட்டார்.