சென்னை: எண்ணூரில் எண்ணெய் கசிவு கலந்த விவகாரத்தில் மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ளநீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், கடந்த டிசம்பர் 19ம் தேதி எண்ணெய் கசிவு முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது.
சுமார் 1,937 உழியர்கள், அதிநவீன இயந்திரங்களுடன் எண்ணெய் கசிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கசிவுக்கு முன் இருந்த நிலை கொண்டுவர அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தான் எண்ணெய் கசிவு வெளியேறியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மற்றும் கடல் நீரில் எண்ணெய் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் முடிந்துள்ளதாகவும், அதிகமான கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நீர்நிலைகளில் எந்த எண்ணெய் கலப்பும் ஏற்படவில்லை என்றும், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 40 பறவைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் அகற்றப்பட்டாலும் அடுத்த 3 மாதத்துக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிவு ஏற்படவில்லை என்றும் கசிவுக்கு எந்த நிறுவனம் காரணம் என தெரியாமல் சிபிசிஎல் மீது குற்றம்சாட்டுவது விசாரணை இன்றி தண்டனை தருவதை போல உள்ளது என அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
எண்ணூரில் உள்ள 200 நிறுவனங்களில் எத்தனை அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து மற்ற நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், அடுத்த விசாரணையின் போது மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.27க்கு ஒத்திவைத்துள்ளது.