மயிலாடுதுறை: தஞ்சாவூர் தாலுகா கண்ணாரக்குடி கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (35). மயிலாடுதுறை அருகே உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரை, தான் பாடம் எடுத்து வந்த தனியார் டியூஷன் சென்டருக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதேபோல் அடிக்கடி அந்த மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர், மாணவியிடம் கேட்டபோது, தன்னிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டது பற்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.