நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய ஏஎஸ்பி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் உட்பட 14 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜி ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்ட 13 பேர் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மட்டும் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வக்கீல் ஆஜரானார். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மகாராஜன், மாடசாமி ஆகியோர், இந்த வழக்கில் மனித உரிமை மீறல்களும் உள்ளதால், மாவட்ட அளவிலான நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு மாஜிஸ்திரேட், அதற்கான தனி மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜன.31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.