மதுரை: மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம் (51). இவர் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 52 சென்ட் இடத்தை தனது மகள் ஜனனி நினைவாக மதுரை யானைமலை கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.
இந்த தானப் பத்திரப்பதிவு அரசுக்கு செய்து கொடுத்துள்ளதை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி முன்னிலையில் பூரணம் ஒப்படைத்தார். இவர் கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ஏற்கனவே கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளார். பூரணத்தின் கணவர் மற்றும் ஒரே ஒரு பெண் குழந்தை இறந்து விட்ட நிலையில் தனது சொத்துகளை பெண் குழந்தைகளின் கல்வி நலனுக்காக பூரணம் வழங்கி வருகிறார்.