ராஞ்சி : ED, CBI போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிரக் கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நிலத்தின் உரிமையை மாபியாக்கள் சட்டவிரோதமாக மாற்றி மோசடி நடப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் 2011ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் நில முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடையாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. ஈ.டி. முன்பு ஆஜராகும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது என ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து துறைகளுக்கும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவு தொடர்பாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் வந்தனா தாடெல், மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகளுக்கும் ரகசியக் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், “அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற ஒன்றிய அமைப்புகளின் விசாரணைக்கு ஜார்க்கண்ட் அரசு ஊழியர்கள் ஆஜராக வேண்டாம். ஜார்க்கண்ட் மாநிலத்தை சாராத விசாரணை அமைப்பின் முன் அரசு ஊழியர்கள் தாமே நேரடியாக விசாரணைக்காக ஆஜராக தேவையில்லை. சம்மன் அனுப்பப்பட்டால் அரசு ஊழியர்கள் அதுபற்றி அமைச்சரவை ஒருங்கிணைப்புக்குழு, ஊழல் கண்காணிப்பு துறையிடம் தெரிவிக்க வேண்டும். விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஆஜராக வேண்டுமா, -வேண்டாமா என்பது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எழுப்பும் சந்தேகம், கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது. அரசு ஆவணங்களை பகிரக் கூடாது ,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.