ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பெர்ன் புல் மைதானம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு முதல் சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது தவிர வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல் இரண்டாவது சீசனான செப்டம்பர், அக்டோபரில் தமிழகத்தின் சுற்றுலா பயணிகளை காட்டிலும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அதிகளவு வருவார்கள். இந்த நிலையில் முதல் சீசனுக்காக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகள் நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யப்படுகிறது.
சிறிய புல் மைதானத்திலேயே இந்த மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், முதல் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் விளையாடி செல்ல ஏற்றவாறு பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள பெர்ன் புல் மைதானம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நாள்தோறும் புல் மைதானத்தில் தண்ணீர் பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த புல் மைதானத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.