மும்பை: புரோ கபடி தொடரின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் இப்போது மும்பையில் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் அணியான யு மும்பா கணிசமான வெற்றிகளைக் குவித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. அதற்கு அந்த அணியின் பயிற்சியாளராக உள்ள கோலம்ரெசா மசந்தரானியும், உதவி பயிற்சியாளராக உள்ள ஜீவாகுமாரும் முக்கிய காரணம். ஈரானைச் சேர்ந்த மசந்தரானி முன்னாள் கேப்டன் மட்டுமல்ல… தேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். அந்த அணி பல முறை உலக, ஆசிய சாம்பியனான இந்திய அணியையே வீழ்த்தும் அளவுக்கு தயார்படுத்தியவர்.
‘ஈரான் சிங்கம்’ என்றழைக்கப்படும் இவர் முன்னாள் சர்வதேச கபடி வீரர் மட்டுமல்ல, மல்யுத்த வீரராகவும் இருந்தவர். புரோ கபடியில் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான மசந்தரானி ஏற்கனவே 6வது சீசனில் யு மும்பா பயிற்சியாளராக இருந்தார். இடையில் தெலுகு டைடன்ஸ் அணிக்கு மாறினார். மீண்டும் யு மும்பா பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மசந்தரானி, முன்னாள் சர்வதேச வீரரான ஜீவாகுமாருடன் இணைந்துள்ளார். அதனால் யு மும்பா வெற்றிகளை குவித்து வருகிறது. முக்கியமாக இந்த இருவரும், தமிழகத்தைச் சேர்ந்த வி.விஸ்வநாத், எம்.கோகுலகண்ணன் ஆகியோருக்கு உரிய வாய்ப்பளித்து ஜொலிக்க உதவி வருவது குறிப்பிடத்தக்கது.