ஏழாயிரம்பண்ணை: கனமழையால் மீண்டும் கொள்ளளவை எட்டியதால், வெம்பக்கோட்டை அணை 2வது முறையாக திறக்கப்பட்டு, 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் 24 அடி உயர அணை உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சிவகாசி நகரின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது.
இந்நிலையில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து நேற்று இரவு 2வது முறையாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணையின் கரையோரம் உள்ள கோட்டைப்பட்டி, விஜயகரிசல்குளம், சேதுராமலிங்காபுரம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை கண்மாய் நிரம்பி வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், பல்வேறு கிராம, நகர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.