சென்னை: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 9ம் தேதி கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.