Saturday, September 21, 2024
Home » இலக்கை எட்டுவோம்

இலக்கை எட்டுவோம்

by Ranjith

தலைநகர் சென்னையில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் அதன்பின் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் இம்மாநாட்டில், கடந்த அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளை மிஞ்சும் வகையில் முதலீடுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது. சிஐஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டுக்காக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உள்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தொழில்துறை, ஆட்டோமொபைல், எரிசக்தி துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.

குறிப்பாக, படித்த இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு இம்மாநாடு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளில்‌, தொழில்‌ வளர்ச்சியிலும்‌, பொருளாதாரத்திலும்‌ முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. சமீபத்தில்‌, நிதி ஆயோக்‌ வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தரவரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன்‌ அகில இந்திய அளவில்‌ தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. மின்னணுவியல்‌ ஏற்றுமதியிலும்‌ தமிழ்நாடு முதலிடத்தில்‌ உள்ளது. அதிக எண்ணிக்கையில்‌ தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ பணியாளர்களை கொண்ட மாநிலங்களில்‌ தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களின்‌ எண்ணிக்கையில்‌, அகில இந்திய அளவில்‌ 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில்‌ தொழில்‌ புரிவதற்கு சிறந்த மாநிலங்களில் ஒன்றாகவும்‌ தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்த வரிசையில், அடுத்த மணிமகுடமாக, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

You may also like

Leave a Comment

seventeen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi