நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர். அப்போது சிபிசிஐடி போலீசார், கோவை ஆய்வகத்தில் இருந்து பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரிடம் 8 செல்போன், 4 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன்கள், சிம்கார்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் 8,000 பக்கங்கள் உள்ளது. 8,000 பக்கங்கள் கொண்ட தகவல்களை முழுமையாக படிக்க சிபிசிஐடி தரப்பு அவகாசம் வேண்டும் என்று கோரியது. சிபிசிஐடி தரப்பு கால அவகாசம் கோரியதை பதிவு செய்த நீதிபதி வழக்கின் விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.