திருவனந்தபுரம்: பிரதமர் மோடி நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜ மகளிர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருச்சூர் வடக்குநாதர் கோயில் அருகே உள்ள தேக்கின்காடு மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மோடி கலந்துகொண்டு பேசிய மேடையில் சாணித் தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தப் போவதாக இளைஞர் காங்கிரசார் அறிவித்தனர்.
இது குறித்து அறிந்ததும் நேற்று காலை அங்கு பாஜ தொண்டர்கள் குவிந்தனர். சம்பவ இடத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். சாணி கரைத்த தண்ணீருடன் தேக்கின்காடு மைதானத்திற்கு திரண்டு வந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அந்தப் பகுதியில் திரண்டிருந்த பாஜ தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் திருச்சூரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.