Sunday, October 6, 2024
Home » தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொன்ற பைனான்சியர்

தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொன்ற பைனான்சியர்

by MuthuKumar

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து (56). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மருதம்மாள் (54). இவர்களது மகள் விமலாதேவி. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மகள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருவதால் இன்னாசிமுத்துவும், அவரது மனைவியும் மட்டும் கீழபாண்டவர்மங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோவில்பட்டியில் வசிக்கும் மைத்துனர் சின்னமருது மற்றும் உறவினர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்றிரவும் அவர்களுக்குள் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மருதம்மாள் தனது சகோதரர் சின்னமருதுவிடம் போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர், “எதுவானாலும் காலையில் பேசிக் கொள்வோம். இப்போது இருவரும் சண்டை போடாமல் படுத்து தூங்குங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு இருவரும் தூங்கச் சென்றனர். எனினும் ஆத்திரம் தணியாத இன்னாசிமுத்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மருதம்மாளை தலை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர், மண்டை பிளந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

அதன்பிறகு இன்னாசிமுத்து கதவை பூட்டி விட்டு வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டார். இதற்கிடையில் சின்னமருது மற்றும் உறவினர்கள் கணவன், மனைவி இருவரையும் சமாதானப்படுத்துவதற்காக இன்று காலை கீழபாண்டவர்மங்கலம் வந்தனர். அப்போது அவர்களது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சின்னமருது மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு மருதம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், அருகில் இன்னாசிமுத்து அரிவாளுடன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரை பிடிக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து இன்னாசிமுத்து, சின்னமருதுவின் கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், அரிவாளுடன் நின்று கொண்டிருந்த இன்னாசிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர். மருதம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து இன்னாசிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi