சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில், கைவினை பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பூம்புகார் விற்பனை அரங்கு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. கதைகள், நாவல்கள், இலக்கியம், வாழ்க்கை வரலாறு என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு கண்காட்சியின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனை அரங்கு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள், தம்மோபட்டி மரசிற்பங்கள், மாமல்லபுரம் கற்சிலைகள், தஞ்சை நெட்டி உள்ளிட்ட பொருட்கள் இந்த அரங்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பஞ்சலோக சிலைகள், நாச்சியார் கோயில் பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள் உள்ளிட்டவையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பூம்புகார் நிறுவன விற்பனையகத்தின் 50வது ஆண்டை கொண்டாடும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். நலிவடைந்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட புத்தக அரங்குகளை பார்வையிடும் மக்கள், இந்த பூம்புகார் விற்பனை அரங்கத்தையும் கவனிக்க தவறுவதில்லை