சென்னை: வரும் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்தும் வகையில் இன்று இரண்டாவது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 9 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.