ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்ட கலைத்துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இங்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் 1500 ரகங்களை கொண்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனி இடம் உள்ளது.
இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூங்காவில் உள்ள பெரும்பாலான ரோஜா செடிகளில் மலர்கள் உதிர்ந்தும், காய்ந்தும் காணப்படுகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் உதிர்ந்து காணப்படுவதால் செடிகளை கவாத்து செய்து பராமரிக்க தோட்ட கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘ஊட்டி ரோஜா பூங்காவை பார்வையிட வந்தோம். பனிப்பொழிவு காரணமாக ரோஜா செடிகளில் மலர்கள் உதிர்ந்தும், காய்ந்தும் காணப்படுகிறது. மலர்களை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தோம்’ என்றனர்.