சின்னசேலம், ஜன. 3: ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நுழைவு வாயிலில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் விழா காலம் மற்றும் விடுமுறை தினங்களில் பெண்கள் அதிகளவில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் புத்தாண்டு தினத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். இக்கோயில் பூசாரியாக சவுந்தர்ராஜன் உள்ளார். வழக்கமாக இந்த கோயில் உண்டியல் பகலில் வெளியில் இருக்கும். இரவு கோயிலை பூட்டும்போது ஒரு அறையில் எடுத்து வைப்பது வழக்கம். வழக்கம்போல நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கோயிலை பூட்டும்போது உண்டியலை ஒரு அறையில் எடுத்து வைத்துவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பூசாரி கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் உள் கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் திருடு போயிருந்தது. இது குறித்து கோயில் தர்மகர்த்தா சுரேஷ், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.