திருமலை: நண்பருடன் சேர்ந்து காதலன் சீரழித்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து அழைத்து சென்ற போட்டோகிராபர், தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.ஒடிசாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஞ்சரபாலத்தில் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விசாகப்பட்டினம் ரயில்வே நியூ காலனியில் உள்ள ஒரு வீட்டில் நாய்களுக்கு உணவளிக்கும் வேலை செய்து வருகிறார். அதே வீட்டில் மற்றொரு வாலிபரும் வேலை செய்கிறார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதன்படி கடந்த டிசம்பர் 18ம் தேதி சிறுமியை அவரது காதலன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர், தனது நண்பரையும் வரவழைத்துள்ளார். அவரும், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இருவரும், ‘நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல கூடாது. அவ்வாறு தெரிவித்தால் கொன்று விடுவோம்’ என மிரட்டியுள்ளனர்.
இதனால் கடும் மன வேதனை அடைந்த சிறுமி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆர்.கே.கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அமர்ந்தபடி கதறி அழுதார். அப்போது, சுற்றுலா பயணிகளை போட்டோ எடுக்கும் போட்டோகிராபர், சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறுவது போல் நடித்து ஒரு அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர்கள் 7 பேரும், அந்த சிறுமியை 2 நாட்களாக அறையில் அடைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி விசாகப்பட்டினம் 4 நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறி கதறினார். இதுகுறித்து போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான காதலன், போட்டோகிராபர் மற்றும் அவர்களது நண்பர்களை பிடிக்க ஜார்கண்ட் மற்றும் விசாகப்பட்டினத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.