இஸ்லாமாபாத்: தார்மீக காரணங்களின் அடிப்படையிலேயே இம்ரான் கானின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்தாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான் மீதான தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இம்ரான் கான் தனது பூர்விக நகரமான மியான்வலி மற்றும் லாகூரில் உள்ள 2 தொகுதிகளில் கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இருதொகுதிகளிலும் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதேபோல் லகட்சியை சேர்ந்த பலரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் “ஊழல் வழக்கில் சிறையில் உள்ள இம்ரான் கானின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் தொடர்கிறது. தார்மீக காரணங்களின் அடிப்படையிலேயே இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.