2023 ம் ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கலைஞர் மகளிர் உரிமை தொகை, அவள் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, புதுமை பெண் திட்டம் விரிவாக்கம், மழை, வெள்ளம் நிவாரணம் என மக்களுக்கான அரசாக செயல்பட்டது. இது பெண்கள், விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டம் தொடங்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலை கோயில் குடமுழுக்கு, அரசு விரைவு பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய சென்னை பஸ் செயலி அறிமுகமானது.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் திட்டம் விரிவாக்கமானது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலை நோக்கு திட்டம், 433 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மின் வாகன கொள்கையை அறிவித்து ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்த்து 1.5 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலானது. மகளிர் காவல்துறை சார்பில் `அவள்’ திட்டம் தொடங்கப்பட்டு பெண் காவலர்களுக்கு விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 9 திட்டங்களை அறிவித்தார்.
சென்னை அடுத்த வரகடத்தில் நிறுவியுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள், 1,000 படுக்கைகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கடலூர் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.70,000 கடனுதவி திட்டம்,500 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட்டது. மதுரையில் பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பும், முதியோர் உதவித்தொகை ரூ.1,200 உயர்த்தியும் வழங்கப்படுகிறது.
சென்னையில் ரூ.4,276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அடிக்கல், தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டமும், பிரபல பின்னணி பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரையில் சிலை திறப்பும் வரவேற்பை பெற்றது. நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமலானது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் `கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மேல் பயன்பெறுகிறார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதை உத்தரவு பாராட்டை பெற்றது. சென்னையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் திருவுருவச்சிலை, சாலைகள் குறித்து புகார் சொல்ல `நம்ம சாலை’ என்ற புதிய செயலி, உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் அமலானது. ஒ.எம்.ஆர். சாலையில் `U’ வடிவ மேம்பாலம், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையும் திறக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியும், தென்காசி, கன்னியாகுமரிக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய `கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ திறக்கப்பட்டது. இதுபோன்ற மக்களுக்கான திட்டங்கள் மூலம் மக்களை வறுமையில் இருந்து மீளவும், பெண்களுக்கான பொருளாதாரத்தை உயர்த்தவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.