திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது உள்பட பல விவகாரங்களில் கேரள அரசுடன் கவர்னர் மோதி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் புதிய 2 அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றபோது கவர்னர் அளித்த தேநீர் விருந்தை முதல்வர் பினராயி விஜயனும், அமைச்சர்களும் புறக்கணித்தனர்.
இதற்கிடையே கேரள பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை முறைகேடாக பணி நியமனம் செய்வதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.
அவர் செல்லும் இடங்களில் எல்லாம் எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்புக் கொடி காண்பித்து வருகின்றனர். தனக்கு கருப்புக் கொடி காண்பிக்கும் எஸ்எப்ஐ அமைப்பு ஒரு ரவுடிகளின் கூட்டம் என்று கவர்னர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று கண்ணூர் பையாம்பலம் கடற்கரையில் கவர்னர் ஆரிப் முகம்மது கானின் 30 அடி உயர உருவ பொம்மையை எஸ்எப்ஐ அமைப்பினர் எரித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.