திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏரி, குளங்கள் நிரம்பின. இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலாற்றில், கடந்த இரு தினங்களாக அதிகளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வெள்ளத்தில் ஆடு, மாடுகள் மற்றும் குப்பைகள் அடித்து வந்து கல்பாக்கம் கடலுக்கு அருகாமையில் உள்ள வாயலூர் தடுப்பணை மற்றும் பாலாற்று பாலம் ஆகிய பகுதிகளில் ஒதுங்கியுள்ளன. இந்நிலையில், பாலாற்றை ஒட்டியுள்ள வாயலூர் ஐந்துகாணி பகுதியில் உள்ள முகத்துவாரம் அருகே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் உடல் முழுதும் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதியினர் சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இறந்துக் கிடந்தவர் யார்? இவர் எப்படி இறந்தார்? ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து இறந்திருப்பாரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். …