திருமலை: இந்திய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு. இவர் நேற்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை முதல்வர் ஜெகன்மோகன் வரவேற்று சால்வை அணிவித்தார். அப்போது துணை முதல்வர் நாராயணசுவாமி, எம்.பி. பெத்திரெட்டி, மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் அம்பதி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியலில் எனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் கட்சியில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆரம்பத்தில் இருந்தே ஜெகன் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அதனால்தான் கடந்த காலங்களில் அவருக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டேன். எனது பகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். கடந்த காலங்களில் நலத்திட்டங்கள் குறித்து சந்திரபாபுவும், பவன் கல்யாணும் பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இப்போது அவர்கள் அதிக நலத்திட்டங்களை தருவதாக கூறுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆந்திராவில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பதி ராயுடுவுக்கு குண்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.