கொடைக்கானல், டிச. 29: கொடைக்கானல் பூண்டி கிராமம் நாட்டாம்பட்டியில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் தங்கும் விடுதி ஒன்றை கட்டி வருகிறார். இந்த கட்டிட பணியில் பாண்டிச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (32), கன்னியாகுமரி முழுக்கோடு அரண்மனை பகுதியைச் சேர்ந்த அனீஸ் சூர்யா பால் (29)ஆகிய இருவரும் பணி செய்து வந்துள்ளனர். மேல்மலைப்பூண்டி கிராமத்தில் போதை காளான் விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இந்த கட்டிடப் பணியில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் அனீஸ் சூர்யா பால் ஆகிய இருவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் இவர்கள் போதை காளான் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து போதை காளான் வைத்திருந்த கட்டிடப் பணியாளர்கள் மணிகண்டன் மற்றும் அனீஸ் சூர்யா பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 10 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.