சென்னை: காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகளை பிடிக்கச்சென்றபோது, போலீசாரை தாக்கியதால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (எ) சரவணன் (35). இவர், மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ரைஸ் மில் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக பிரபாகரன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார்.
அதேபோல், நேற்று முன்தினம் காலை புதுப்பாளையம் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து காவல் நிலையத்தில் கையொப்பம் இட நடந்து சென்றபோது, காரில் வந்த 4க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், பிரபாகரனை பட்டப்பகலில் நடுரோட்டில் படுகொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பினர். தகவலறிந்து அங்கு சென்று மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதேபோல், மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தேமுதிக நிர்வாகி சரவணன் என்பவர் பல்லவர்மேடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக சரவணனின் தம்பி ரகு தரப்பிற்கும், பிரபாகன் தரப்பிற்கும் முன்விரோதம் இருந்துள்ளது. ரகு மீதும் ஏற்கனவே குண்டு வீசியுள்ளார். அதில் அவர் தப்பி விட்டார். உறவினர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பிரபாகரனை உயிரோடு விட்டால், தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்து அதற்கு, பழிவாங்கும் வகையில் ரகுதான் பிரபாகரனை கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், காரில் இருந்து இறங்கி சென்று பிரபாகரனை கண்டம், துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. தமிழகத்தில் புதிதாக டிஜிபியாக சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் ஆகியோர் பதவி ஏற்ற பிறகு ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைதொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் ரகு, கருப்பு பாட்சா (எ) அசேன் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள கன்னியாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை சுற்றிவளைத்தனர். அப்போது, 2 பேரும் தப்பியோட முயற்சி செய்த நிலையில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு எஸ்ஐ ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய 2 பேரை அரிவாளால் தாக்கியுள்ளனர். உடனே எஸ்ஐ சுதாகர், குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட ரவுடி பிரபாகரன் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் உள்ள பிரபாகரன் இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதே நேரத்தில் நேற்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள் ரகு (எ) ரகுவரன் மற்றும் கருப்பு பாட்சா (எ) அசேன் ஆகிய 2 பேரின் உடல்களும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.