சென்னை: அரசுப் பள்ளிகளில் சாதிய தீண்டாமை என்பது இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக நாங்களும் ஆய்வு செய்வோம். அவர்கள் கூறுவதுபோல தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி 7ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும்.
இரண்டு லட்சம்பேர் பங்கேற்ற முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு கணினி வழியில் நடத்தியதில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும். நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வில், விடுபட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றார்.