சென்னை: சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பசுமை தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். கனமழை காரணமாக, மணலி பகுதியில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கசிவு, எண்ணூர் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள் அனைத்திலும் கச்சா எண்ணெய் படிந்தது.
கடந்த 20 நாட்களாக இங்குள்ள 8 மீனவ கிராம மக்கள் பாதிப்படைந்தனர். இதனிடையே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமை தாயகம் சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தினார். இந்த முகாமில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துக் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து எண்ணூர் பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தார்.