கன்னியாகுமரி: சுனாமி கோரத் தாண்டவம் ஏற்பட்டு 19ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது.
இதனால், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் கடலோரப் பகுதிகள் ஆழிப்பேரலையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்டோரும், உலகளவில் 2 லட்சத்திற்கு மேலானோரும் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுனாமியின்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் நினைவாக கனனியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் இந்த நினைவிடங்களில் சுனாமியால் உயிரிழந்தோரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்த துயர சம்பவத்தின் 19ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
சுனாமியால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மேலும் கடலூரில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்துவதுடன் கடலில் பாலை ஊற்றியும், மலர்களை தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.