பெங்களூரு: ‘‘பெங்களூருவில் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் அனைத்தும் கன்னடத்தில் இருக்க வேண்டும்’’ என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கடைகளின் பெயர் பலகைகள் அனைத்திலும் கன்னடத்தை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதுகுறித்து மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘பெங்களூருவில் உள்ள வணிக கடைகளின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட எழுத்துக்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கன்னடத்தை காப்பாற்றவும், கன்னடத்தை வளர்க்கவும் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து ‘‘கன்னட நிலத்தில், கன்னடத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விதிகளை கடைப்பிடிப்பது அனைவரின் கடமையாகும்’’ என்றார். இது தொடர்பாக கூட்டம் நடத்திய பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், ‘‘கன்னட மொழியில் பெயர் பலகைகள் வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவு மற்றும் மாநகராட்சி சுற்றறிக்கையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார்.