திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10ம் திருநாள் நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராப்பத்து விழா நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலை 3 மணியளவில் ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி தரித்து கிளி மாலை அணிந்து சொர்க்கவாசலை கடந்து வந்து திருமாமணி மண்படத்தில் பக்தர்களை தேடி வந்து அருள் பாலித்தார். நேற்று 24ம் தேதி 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்நிலையில் ராப்பத்து 2ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து கிரீடம், வைர காது காப்பு, வைர அபயகஸ்தம், பவள மாலை உள்ளிட்ட ஆபரண அலங்காரத்துடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பரமபதவாசலை கடந்து 3 மணியளவில் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு 10.30 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பரமபத வாசலை கடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.