திருப்பூர், டிச.24: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பாக, தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் ஒரு நாள் விவசாயிகள் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இதில், பஞ்சாயத்து துணைத்தலைவர் சண்முகசுந்தரம் விழாவினை தொடங்கி வைத்தார்.
அதன்பின், மாணவ, மாணவிகள் விவசாய பணிகளை மேற்கொண்டனர். விவசாய நிலத்தில் உள்ள களைகளை எடுத்தும், தண்ணீர் பாய்ச்சியும், மாட்டு சாணத்தை அகற்றியும், விவசாயத்தில் இருக்கும் கஷ்டத்தை தெரிந்து கொண்டனர். இதில், மாணவ செயலாளர்கள் சுந்தரம், காமராஜ், செர்லின், தினேஷ், கண்ணன், குணா, மது, கார்த்திக் ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து விவசாய பூமியில் பணியை தொடங்கினர். இதன் பின்னர் பாரம்பரிய விளையாட்டுக்களை விவசாயிகளிடம் விளையாடி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.