சென்னை: அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது பணியில் உள்ள 1,25,000 தொழிலாளர்கள், பணி ஓய்வு பெற்ற 91,000 ஓய்வூதியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 2003 ஏப்.1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பல முறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்கள் சார்பாக அரசு அதிகாரிகள், கழக அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற ஜன.5ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின் 6 வார காலத்திற்குள்ளோ வேலை நிறுத்தத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.