வாலாஜாபாத்: கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர். வாலாஜாபாத் அடுத்த கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன், வலம்புரி, விநாயகர், கங்கையம்மன் ஆகிய கோயில்களில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, 47 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு, 48வது நாளான நேற்று முன்தினம் இரவு மகா மாரியம்மன், விநாயகர் கோயில்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழா கோலம் கொண்டிருந்த வளாகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த விளக்கு பூஜையில் குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை கலந்துகொண்டு திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உடல்நல குறைவு ஏற்பட்டவர்கள் நலம் பெறவும் தங்களின் வேண்டுதல்களை முன் வைத்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.