சென்னை : கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கனமழை காரணமாக வழித்தடங்கள் சேதமடைந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே 500க்கும் அதிகமான பயணிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 24 மணி நேரங்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
மேலும் ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் சிக்கியிருப்பதால் அவர்களுக்கான அவசர கால மருத்துவ உதவியை ஏற்படுத்தி தருவது இந்த நேரத்தில் அவசியமாகிறது.ஆகவே, அவசரகால மருத்துவக்குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, ரயிலில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.