பேராவூரணி, டிச.19: பேராவூரணி அருகே அக்னி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் திருடியதை தடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கட்டையங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (64), விவசாயியான இவரது விவசாய நிலங்களின் அருகில் அக்னி ஆறு என்னும் காட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் கழுகப்புலிகாடு கிராமத்தை சேர்ந்த ஹரிஷ், மணி அவர்களது நண்பர்கள் இருவர் சேர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளினராம்.
இதை பார்த்த செல்வராஜ் மணல் அள்ளுவதால் பெரும் வெள்ளம் வந்தால் இங்குள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து விடும் எனக்கூறி மணல் அள்ளுவதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் செல்வராஜை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றதோடு, செல்போனில் செல்வராஜை தொடர்பு கொண்டு தொடர்ந்து மண் அள்ளுவோம் உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது உனது மின்மோட்டாரையும், இருசக்கர வாகனத்தையும் வந்து சேதப்படுத்துவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதை தடுத்த விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.