திருப்பூர், டிச.19: ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் கொப்பரை தேங்காய் விலை கிலோ 108 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து வைத்துள்ளது. இந்த கொப்பரைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தி குறைவான விலைக்கு கொள்முதல் செய்யும் பட்சத்தில், விவசாயிகள் வெளிச்சந்தையில் விற்கப்படும் போது கொப்பரை தேங்காயின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரை தேங்காய்களை எண்ணெய்யாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.